விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

நல்லதோ கெட்டதோ அதை மனதில் போட்டு மறைக்காமல் எல்லோரிடமும் நேருக்கு நேராகச் சொல்லிவிடும் நல்ல உள்ளம் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே!

இதுவரை மூன்றாம் இடத்தில் அமர்ந்து பலவிதமான தடைகளைக் கொடுத்து உங்களைச் செயல்பட விடாமல் பார்த்துக்கொண்ட குருபகவான் இப்போது நான்காம் வீட்டுக்குச் செல்கிறார். நான்காம் இடம் என்பதும் குருபகவானின் சஞ்சாரத்தில் அனுகூலமான பலன்தரும் இடம் அல்ல என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்தான் என்றாலும் குருபகவான் ஸ்தான பலத்தை விடப் பார்வை பலம் அதிகம் என்பதால் அவ்வப்போது நல்ல பலன்களும் ஏற்படும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டு மற்றும் ஐந்தாம் வீடுகளுக்குரிய குரு பகவான் தன் நட்சத்திரமுள்ள வீட்டில் அமர்வதால் இனி கெடுபலன்கள் குறையும். என்றாலும் எப்போதும் பணிச்சுமையும் அலைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை அவசியம். முடிவு எடுக்கும்போது உணர்வு பூர்வமாக எடுக்காமல் அறிவுபூர்வமாக எடுக்க வேண்டியது அவசியம். தாயார் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அவரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற சந்தேகம் ஈகோ பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவது எதிர்காலத்துக்கு நல்லது.

குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்ளின் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். உயர் கல்வி - உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் மிகவும் கட்டுபாடு தேவை. அதிகமாகவே அல்லது நேரந்தவறியோ சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

10 ம் வீடான சிம்மத்தை குருபகவான் பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டிய காலம் இது. எனவே எதற்கெடுத்தாலும் போலீஸ், கேஸ், கோர்ட் என்று செல்ல முயல வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 12 ம் இடமான துலாத்தை குருபகவான் பார்ப்பதால் இனி செய்யும் செலவுகளில் அதிகம் சுப செலவுகளாக இருக்கும். ஆன்மிக காரியங்களுக்கு செலவிடுவீர்கள். தினமுமே யோகா, தியானம் செய்யும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுவெளியில் பேசும்போது வரம்பு மீறி விமர்சனம் செய்ய வேண்டாம். எல்லோரையும் கொஞ்சம் அரவணைத்துப் போங்கள்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். இளமையாக உணர்வீர்கள். பேச்சில் இதுவரை இருந்த பயம் விலகி கம்பீரம் தொனிக்கும். குடும்பத்தின் வருமானம் கணிசமாக உயரும். மழலை வரம் வேண்டும் தம்பதிக்கு இந்தக் காலகட்டத்தில் அதற்கான பலன் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலன் கொடுக்கும். சகோதர உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மனதில் வலிமை கூடும். திருமண முயற்சிகள் கைகூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்களுக்கான மாலை மரியாதை தவறாமல் கிடைக்கும். வேற்றுமதத்தவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். புதுப்பிக்காமல் இருந்த பிதுர்ராஜ்ஜிய சொத்தைப் புனரமைப்பீர்கள். வேலை தேடும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அயல்நாடு செல்லும் முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்யும் இக்காலக்கட்டத்தில் எதிலும் வெற்றியே கிட்டும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து உயர்கல்வி, உத்தியோகம் அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கூடி வரும்.

வியாபாரிகளுக்கு:

தொழிலை விரிவுபடுத்தலாம். லாபத்துக்குக் குறைவில்லை. பணியாளர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அதேவேளையில் அவர்களிடம் அனைத்தையும் சொல்லிவிடாதீர்கள். விட்டுப்போன வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களை அறிவிப்பீர்கள். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்களிடம் கராராகப் பேச வேண்டாம். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். சக ஊழியர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மோதல் போக்கைக் கைவிடுங்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டாகலாம்.

குருபகவான் 10 ம் வீட்டை பார்ப்பதால் இந்த சவால்களை எல்லாம் சமாளிப்பீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தடைபட்டு வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தரும்.

பரிகாரம்

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரரை வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top