துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

கலைகளில் ஆர்வமும் காரியத்தில் கருத்தும் கொண்ட துலாராசி அன்பர்களே

இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் நான்காம வீடான மகரத்தில் அமர்ந்து உங்களை சங்கடப் படுத்திக்கொண்டிருந்தார் குருபகவான். எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடினீர்கள். பல வகைகளிலும் தடை தாமதம் என்று இருந்த நிலை தற்போது மாறப்போகிறது. 13.11.2021 அன்று குருபகவான் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5 ம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார். இது வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பெயர்ச்சி என்றே சொல்ல முடியும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், பிரச்னைகள், சண்டைகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். ஊருக்காக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஒருவருக்குள் ஒருவர் அந்நியோன்யமும் அன்பும் இன்றி இருந்த நிலை மாறும். கணவன் மனைவியருக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பல காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த துலாராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக் காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் தேரும். செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு மரியாதை அமர்க்களப்படும்.

உங்கள் அணுகுமுறையே இனி மாறும். ரசனை அதிகரிக்கும். குலதெய்வத்துக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனைச் செய்து மன நிம்மதி பெறுவீர்கல். சொத்துப் பிரச்னைகள் தீரும்.

குருவின் பார்வை உங்கள் ராசியின் மீதே விழுவதால் உங்களின் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். 9 ம் வீடான மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் தீரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்களின் 11 ம் வீடான சிம்மத்தை குருபகவான் பார்வையிடுவதால் சகோதர உறவுகளுடன் இருந்த வருத்தங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். உறக்கம் வராமல் தவித்த துலாராசி அன்பர்கள் இனி நன்கு உறங்குவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். அரசியல்வாதிகள் ஆட்டம் கண்ட தங்களின் பதவியைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுக்குக் குறை இருக்காது. பேச்சில் அனுபவம் பளிச்சிடும். இதனால் சகலரின் அன்பையும் பெறுவீர்கள். வழக்குகளில் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மட்டும் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உணவு விஷயங்களில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். உங்களுக்கு செரிமானம் ஆகும் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள் இல்லை என்றால் கோளாறுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையோடு மோதல்போக்கைக் கைவிடுங்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். சிலர் தவறான பழக்கங்களுக்கு ஆட்படுவீர்கள். மதிப்பு மிக்க விஷயங்களைக் கையாளும் போது கவனம் தேவை. அலட்சியம் இல்லாமல் பணியாற்ற வேண்டியது அவசியம் என்றாலும் செல்வம் செல்வாக்கு அதிகரித்த வண்ணமே இருக்கும்..

வியாபாரிகளுக்கு:

போட்டிகளால் முடிங்கிக் கிடந்த வியாபாரத்தை மீண்டும் சீர்செய்வீர்கள். உங்கள் தொழில் அணுகுமுறை முற்றிலும் மாறும். அடுத்த ஆங்கில ஆண்டின் தொடக்கத்தில் புதிய முதலீடுகளைச் செய்வது நன்மை பயக்கும். விட்டுப்போன வாடிக்கையாளர்கள் தேடிவந்து வணிகம் செய்வார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும்.

கம்பியூட்டர், உணவு, தரவு வகை வணிகங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் அபரிமிதமான வளர்ச்சி பெறும். பங்குதாரர்கள் உங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

சக ஊழியர்களிடையே இருந்த போட்டி பொறாமை நீங்கும் அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். இதுவரை அதிகரித்துவந்த பணிச்சுமை இனி குறையும். மேலதிகாரிகள் இனி குறை சொல்ல மாட்டார்கள். நல்ல சூழல் அலுவலகத்தில் இருக்கும். பதவி உயர்வுகள் தேடிவரும். தகவல் தொழில் நுட்பத்துரையில் பணியாற்றும் அன்பர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்களே! மறைந்திருந்த தகுதியை வெளிப்படுத்துவீர்கள். நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.

மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளில் சிக்கி சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருச்செந்தூரில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானைச் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top