குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - மீனம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை குடும்ப ஸ்தானமான இரண்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் சகோதர ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். 

சகோதர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். 

நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அயல்நாட்டு வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் அமையும். தனவரவுகளின் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். 

மருத்துவம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். எதிர்பார்த்த சில விஷயங்கள் கைகூடிவரும். நிபுணர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கௌரவப் பொறுப்புகளால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

குரு நின்ற பலன்:

குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வீக சொத்துக்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். 

எதிர்பாராத சில உதவிகளால் கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நினைத்த சில பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி கவனத்தோடு செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்களை நீங்களே செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதால் நெருக்கடிகள் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

மனதளவில் திருப்தியற்ற சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிவட்டார தொடர்புகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

உறவுகளின் வழியில் புரிதல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையும், நெருக்கமும் அதிகரிக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் பிறக்கும். தந்தை வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும்.

உத்தியோகஸ்தர்கள்:

பணிபுரியும் இடத்தில் சில சிக்கலான சூழ்நிலைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுகொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதில் விரயமும், தாமதமும் ஏற்படும். வேலை மாற்றம் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

வியாபாரிகள்:

வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தால் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மறைமுக தடைகளால் கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைக்குண்டான பாராட்டுகளும், மதிப்புகளும் கிடைக்கும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும், சேமிப்புகளின் மூலமாகவும் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது பயனற்ற விரயங்களை தவிர்க்கும்.

வழிபாடு:

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகளும், மனக்குழப்பமும் நீங்கி தெளிவுகள் பிறக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top