சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எப்போதும் முதன்மையையே விரும்பும் சிம்மராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான மகரத்தில் அமர்ந்து ஏராளமான தொல்லைகளைக் கொடுத்துவந்த குருபகவான் 13.11.2021 அன்று ஏழாம் வீட்டுக்கு நகர்வது மகிழ்ச்சியான செய்தியாகும். மனம் தெளிவாகும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குருபகவான் நேர் பார்வையால் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறார். இனி உங்கள் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரிவு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சத்புத்திர பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய வீடுவாங்கும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். நீண்ட காலத்துக்குப் பின் விரும்பிய ஊர்களுக்குச் சென்று ஆலய தரிசனங்கள் செய்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.

குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால் இனி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். சகோதர உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். அவர்களோடு இருந்த வருத்தங்கள் நீங்கும். தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவுவார்கள். பேச்சில் இனிமை பிறக்கும்.

உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பதவிகள் கிடைக்கும். ஊரில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். திருவிழாக்களில் மாலை மரியாதைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், இதுவரை இருந்த நிலைமை மாறித் தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்கட்சிக்காரர்கள் சுமர்த்திய வீண் பழி விலகும்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வசதிகள் கூடும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உரிய வங்கிக் கடன் கிடைக்கும். பழைய சொத்துகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கடன் பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்ப்பீர்கள். தாயாரின் உடல் நலனில் இருந்த குறைபாடுகள் நீங்கும். உறவுகளோடு இருந்த மனஸ்தாபம் விலகும்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் நன்மைகள் ஏற்படும். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகும்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சொத்து வாங்குவது வாங்குவது விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும். அதிகப்படியான செலவுகளும் ஏற்படலாம்.. கர்ப்பிணிகள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. இந்தக் காலகட்டத்தில் உறவுகளிடையே கொஞ்சம் அனுசரணையோடு நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற சிக்கல்கள் தோன்றும். திடீர் பயணங்கள், செலவுகள் ஏற்படலாம். பயணத்தின் போது உரிய பாதுகாப்பைப் பின்பற்றுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனக் குறைவில்லாமல் பயணிக்க வேண்டியது அவசியம்.

வியாபாரிகளுக்கு:

லாபம் இல்லாமல் முடங்கிக் கிடந்த வியாபாரத்தைப் புத்துயிர் கொள்ளச் செய்வீர்கள். உங்கள் அனுபவமும் தனித்தன்மையும் கைகொடுக்கும். அடுத்த ஆங்கில ஆண்டுத்தொடக்கத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். புதிய திறமையான வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு சம்பந்தமான தொழில்கள் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய உரிமம் அனுமதி ஆகியன கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

வேலைபார்க்கும் இடத்தில் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்க வில்லையே என்று கவலைப்பட்டீர்களே, இதோ உங்களுக்கான நேரம் வந்துவிட்டது. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். மேல் நாடுகளிலிருந்து வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பழையபடி அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

கலைஞர்களே! உங்கள் திறமையை நீங்களே உணர்ந்து வெளிக்கொண்டுவருவீர்கள். அதற்கு உதவும் வகையில் நல்ல நிறுவனம் அமையும். அரசாங்க கௌரவம் விருது தேடிவரும்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடும் காலகட்டமாகவும் மன அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

சென்னை திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை வணங்குங்கள். புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top