கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

சமயோஜித புத்தியும் சாமார்த்தியமும் நிறைந்த கடகராசி அன்பர்களே, குருபகவான் மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த நிலை மாறுகிறது. 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சென்று மறைகிறார். 8 ல் குரு நின்றால் பெயருக்குக் கலங்கம் ஏற்படுமே... என்று அஞ்சிகொண்டிருந்தால் அதை விட்டுவிடுங்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் ஸ்திர வீட்டில் மறைவதால் நற்பலன்களே ஏற்படும்.

குருபகவானின் பார்வை உங்களுக்கு இரண்டாம் வீடான சிம்மத்தின் மீது படுகிறது. இது குடும்ப அமைப்பில் மிகவும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இதுவரை இருந்துவந்த வீண் சந்தேகம், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப்புழக்கத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். மனதில் அமைதி பிறக்கும் . நிம்மதியாக உறங்குவீர்கள். குருபகவான் உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் வந்து விலகும். பழைய வாகனத்தை மாற்றிப் புதுவாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மீண்டும் உற்சாகம் ஏற்படும். .

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் இந்தக் காலகட்டத்தில் சஞ்சரிப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சொந்தமாக வீடு வாங்கும் முயற்சி வெற்றிபெறும்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நின்று போயிருந்த கட்டட வேலையைத் தொடங்குவீர்கள். அரசிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். அதேவேளையில் சட்டத்தை மதித்து நடந்துகொள்ளுங்கள். சின்னச் சின்ன விதிமீறல்கள்கூட ஃபைன் செலுத்த வேண்டிய நிலைக்குக் கொண்டு விட்டுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் தம்பதிக்கு நல்ல குழந்தைப் பேறு வாய்க்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வரவேற்பைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

வியாபாரிகளுக்கு:

கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடக்கும். நிலுவையில் இருந்த தொகையை சாமர்த்தியமாகப் பேசி வாங்குவீர்கள். கடையைப் புதிய பெரிய இடத்துக்கு மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிர்பாராத நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள். அதேநேரம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உங்கள் உழைப்பு இதுவரை போற்றப்படாமல் இருந்த நிலை இனி மாறும். அனைவரும் பாராட்டுவார்கள் திறமைக்கு ஏற்ப ஊதிய உயர்வும் பாராட்டுகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்கள் குறித்து அடுத்தவர்களிடம் பேச வேண்டாம். புதிய வேலை மாறுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு வேண்டிய சலுகைகளைக் கேட்டுப் பெறுங்கள். 

கலைஞர்களே! விமர்சனங்களைத் தாண்டி சாதித்துக் காட்டுவீர்கள். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றிபெற வைக்கும். வாழ்வில் ஒருபடி முன்னேறுவீர்கள்.

பரிகாரம்

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரை வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். சகலமும் நன்மையாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top