மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

பிரச்னைகளுக்கு அஞ்சாமல் தன் குறிக்கோளை மட்டுமே பார்த்து திறம்படச் செயல்படும் மீன ராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாதனான குருபகவான் இதுவரை 11 ம் வீட்டிலிருந்து சகல வசதி வாய்ப்புகளையும் வழங்கிவந்தார். வரும் 13.11.2021 முதல் விரைய ஸ்தானமான கும்பத்துக்குள் அடியெடுத்துவைக்கிறார். 13.4.2022 வரை அங்கேயே இருந்து பலன்தரப் போகிறார். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்று பார்ப்போம்.

விரைய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.எவ்வளவு முயன்றாலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கௌரவத்துக்காகச் செலவு செய்வதை நிறுத்துங்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வீட்டுக்குள் சண்டைபோடுவதைக் குறைப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள்.

உங்கள் வேலைகளை வேறு யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். நேரடியாக நீங்களே கவனித்துச் செயல்படுவது நல்லது. புண்ணியத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள்.

குருபகவான் உங்களின் நான்காம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்துவந்த குறைபாடுகள் நீங்கும். தொல்லை கொடுத்த பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டியும் வரலாம்.

6 - ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் கடனில் ஒருபாதியைச் செலுத்தி நிம்மதி அடைவீர்கள். நோய் இருப்பதாக இருந்த அச்சம் விலகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமாகும். எதிர்ப்புகள் விலகும்.

குரு பகவான் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் உங்கள் பக்கம் அனுகூலமாக முடியும். பங்குச் சந்தை மூலம் எதிர்பார்த்த பணம் வரும்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் பணவரவுக்குக் குறைவு இருக்காது. முக்கியஸ்தர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டுமனை வாங்க முயல்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தந்தையின் உடல் நலத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். அவருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் பயணிப்பதால் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். தேவையற்ற விவாதங்கள் சச்சரவுகள் ஏற்படலாம். செலவுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு மூச்சுமுட்டும். யாரையும் முழுமையாக நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் கொடுத்து வராமல் இருந்த கடன்தொகை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சில முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும்.

வியாபாரிகளுக்கு:

வரவு செலவில் கவனம் வையுங்கள். புதியவர்களுக்குக் கடன் கொடுக்க வேண்டாம். அதேபோன்று பொருள்கள் கொள்முதலிலும் அக்கறை தேவை. சந்தையில் தேவை உள்ள பொருள்களை அறிந்து கொள்முதல் செய்யுங்கள். தள்ளுபடி சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்பீர்கள். பணியாளர்களால் சில பிரச்னைகள் வந்துபோகும். கடையைப் பெரிதுபடுத்த முயல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேச வேண்டியது அவசியம். பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உழைப்புக்கேற்ப அங்கீகாரம் இருக்காது. மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள் என்றாலும் பணிச்சுமை அதிகமாகவேயிருக்கும். சக ஊழியர்களின் தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதிவு உயர்வு தாமதமாகவே கிடைக்கும்.

கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஓய்வில்லாமல் உங்களைக் கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற உயர்வில்லையே என சில நேரங்களில் ஏங்க வைக்கும்.

பரிகாரம்

தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top