மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்து அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொண்டு சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே, தற்போது உங்களின் 10 ம் இடத்தில் அமர்ந்து பலன்கள் தந்துகொண்டிருந்த குருபகவான் உங்கள் முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தார். பணிச்சுமை அதிகரித்ததோடு நில்லாமல் தேவையற்ற பழிச்சொற்களையும் கேட்க வேண்டியிருந்ததே இனி அந்த நிலையை மாற்றப்போகிறார் குருபகவான். 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு 11 - ம் வீடான கும்பத்துக்குள் பிரவேசம் செய்ய இருக்கிறார்.

இனி உங்கள் திறமைகள் பளிச்சிடும். இதுவரை பதுங்கியிருந்த நீங்கள் புதிய வெளிச்சத்துக்கு வருவீர்கள். சின்னச் சின்ன வேலைகளைக் கூட நினைத்தபடி முடிக்க முடியவில்லையே என்று தவித்தீர்களே அந்த நிலை இனி மாறும். குருபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவில் இருந்த தடைகள் அகலும். கடன் பிரச்னைகளுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அதனால் ஆதாயமும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் விலகும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் கசப்புகள் நீங்கும். உங்கள் உடன் பிறப்புகளின் திருமணத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் நீங்கும்.

குருபகவான் பார்வை பலன்கள்:

குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான மிதுனத்துக்குக் கிடைக்கிறது. இதனால் இளைய சகோதரர்கள் வகையில் இருந்துவந்த பிரச்னைகள் வருத்தங்கள் நீங்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் பெயர் புகழ் அதிகரிக்கும்.

சிம்மத்தை குருபகவான் ஐந்தாம் பார்வையாய் பார்ப்பதால் இல்லறம் இனிப்பாகும். வாரிசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியினருக்கு வாரிசு உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். இதுவரை பிதுர்ராஜ்ஜிய சொத்தில் பிரச்னைகள் இருந்துவந்ததே அது சாதகமாக முடிவுக்கு வரும்.

ராசிக்கு 7 - ம் வீடான துலாமை குரு பகவான் பார்ப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் சோர்வு முதலியன முடிவுக்கு வரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செயல்களையும் விரைந்துமுடிப்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு.

குரு பகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு வாய்க்கும். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் நன்மைகள் உண்டாகும். இதுவரை தயங்கித் தயங்கிப் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சில் ஒரு தீர்க்கமும் உறுதியும் தென்படும். புதிய வீடு மனை வாங்கும் விஷயங்கள் சாதகமாகும். பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பீர்கள். உறவுகளுக்கிடையே நல்ல புரிதல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வழக்கு வியாஜியங்களில் உங்கள் பக்கமே தீர்ப்பாகும். கவலைப்பட வைத்த தாயாரின் உடல் நிலை இப்போது சீராகிவிடும். உறவினர்களின் அன்புத் தொல்லையும் குறையும்.

31.12.2021 முதல் 2.3.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்தக் காலத்தில் நீங்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், போட்டி மனப்பான்மை ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடரலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

2.3.2022 முதல் 13.4.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்திலேயே சஞ்சாரம் செய்வதால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளுக்குத் திருமண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறைவழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

இதுவரை மந்தமாக இருந்த விற்பனை சூடுபிடிக்கும். பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். தொழிலை விரிவாக்கப் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடை அல்லது தொழில் இடத்தை புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். பணியாளர்கள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். இதுவரை ஒத்துழைக்காமல் இருந்த பங்குதாரர் தற்போது தன் தவற்றை உணர்ந்து தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

தொல்லை தந்த மேலதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். பதவி உயர்வு சம்பள பாக்கி ஆகியன கைக்குவரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். பணிச்சுமை குறையும். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. அயல்நாட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும் காலம் இது.

கலைஞர்களுக்கு இது பொன்னான காலம். புதிய வாய்ப்புகள் உங்கள் வாசலைத் தட்டும். பழைய பொலிவைப் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இதுவரை தடுமாற்றதோடு இருந்த உங்களைத் தாங்கிப் பிடித்து வெற்றிப்பாதையில் நடத்தும்.

பரிகாரம்

தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வாழ்வில் ஆதரவில்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். குருவின் அருள் உங்களோடு இருக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top