ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

ரிஷபராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. உங்கள் ராசிக்கு ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கிறார். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்துவந்த சோர்வான மனநிலை மாறும். இதுவரை திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டீர்களே... இதோ இப்போது அந்தக் கவலை தீரும். உங்களின் பழைய மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். கடன் சுமை கணிசமாகக் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த படி முடிப்பீர்கள். உடலில் இதுவரை இருந்துவந்த ஆரோக்கியக் குறைவுகள் நீங்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வீண் அச்சங்களில் இருந்து விடுபடுவீர்கள். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை பூர்வபுண்ணிய மற்றும் புத்திரஸ்தானத்துக்கு ஏற்படுவதால், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கவும், அவர்கள் மூலம் பணவரவு மற்றும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதை கிடைக்கும். எதிர்பார்த்த பணம், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் தீரும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களைகட்டும். கல்வியாளர், அறிஞர் களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.

குரு பகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் உங்களின் விரையாதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் பலவீனங்கள் பலமாகும். வாழ்க்கைத்துணையோடு அன்பும் அந்நியோன்யமும் அதிகரிகும். நெருங்கிய உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். பிதுர்ராஜ்ஜிய சொத்துகலில் இருந்த சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். திருமண வயதுள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு இதுவரை திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருந்ததே அந்த நிலை மாறும். மணமாலை கூடிவரும். உறக்கமின்மையால் தவித்தவர்களுக்கு நல்ல உறக்கம் உண்டாகும். சகோதர உறவுகளால் நன்மைகள் நடைபெறும். நண்பர்களோடு பேசி மகிழும் காலம் இது.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு வலிமையை உண்டாக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்துவீர்கள். பங்கு வர்த்தகம் பலன் கொடுக்கும். திட்டமிட்டுக் காய் நகர்த்தி வேலையை முடிப்பீர்கள். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்தும் பணியிலும் விரிவு படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். ஓய்வில்லாமல் திண்டாடுவீர்கள். செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும். புதிய பொறுப்புகளை பதவிகளை ஏற்கும் முன்பாக நன்கு ஆலோசனை செய்யுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக வேண்டிவரும். சிலர் உங்கள் மீது அநாவசியமாகப் பழி போட முயல்வார்கள்.

வியாபாரிகளுக்கு:

தொழிலில் கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொண்டு கொள்முதல் செய்வீர்கள். ஆளாளுக்கு வந்து உங்களுக்கு ஆலோசனை சொன்னபடி இருப்பார்கள். அனைத்தையும் உங்கள் மூளைக்குக் கொண்டு சென்று செயல்படுத்தாதீர்கள். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டிய காலம் இது. அதேவேளை இதுவரை வரவேண்டிய பாக்கித் தொகைகள் வந்து சேரும். அதில் கடையை மேம்படுத்துவீர்கள். வேதிப்பொருள்கள் விற்பனை, தரகு, மின்னணு சாதனங்கள் மற்றும் துணிவகைகள் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம் இது. பங்குதாரர்கள் உங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு வளைந்துகொடுத்துச் செல்வார்கள். புதிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதோடு எதிர்பாராத லாபமும் வந்து சேரும் காலம் இது.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணிச்சுமை இருக்க தான் செய்யும். உடன் வேலை பார்ப்பவர்கள் தங்களின் வேலைகளையும் உங்கள் மேல் சுமத்துவார்கள். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். தேவையில்லாமல் அலுவலகத்துக்கு லீவு போட வேண்டாம். உடன் வேலை பார்ப்பவர்களை அனுசரித்துப் போங்கள். யார் குறித்தும் யாரிடமும் புகார் சொல்ல வேண்டாம். குறிப்பாக மூத்த அதிகாரிகள் குறித்து வெளியே பேச வேண்டாம். இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் உங்கள் மீதான மதிப்பு பணியிடத்தில் உயரத்தான் செய்யும். உங்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேடிவரும்.

கலைஞர்களைப் பொறுத்த அளவில் இந்த குருப்பெயர்ச்சி முன்னேற்றத்தையே தரும். விமர்சனங்களைத் தாண்டி சாதிப்பீர்கள். புதிய படைப்புகளைப் போராடி வெளியிடுவீர்கள். அதன் மூலம் புகழ் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி வாழ்வில் தன் சொந்த அனுபவங்களைப் பயன்படுத்தி ஒருவர் எப்படி முன்னேற முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதாக அமையும்.

பரிகாரம்

தென்குடித்திட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சணாமூர்த்தியைச் சென்று வழிபடுங்கள். ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு உதவுங்கள். அவர்களின் கல்விக்குச் செய்யும் தானம் உங்கள் துன்பங்களைத் தூளாக்கிவிடும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top