மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

அன்பிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் மிதுன ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களைக் கலங்க வைத்த குருபகவான் வரும் 13.11.2021 அன்று ஒன்பதாம் இடத்துக்கு நகர்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஜோதிட வாக்கு. அதற்கேற்ப இனி எல்லாம் மாறும். சோர்வாகவும் நம்பிக்கை இழந்தும் காணப்பட்ட நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். உங்களின் பாக்கியஸ் தானமான கும்பராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டம் எல்லா வகையிலும் உங்கள் நலனை உறுதி செய்வதாகவே இருக்கும்.

எப்போதும் குருவின் ஸ்தான பலத்தை விடப் பார்வை பலம் அனுகூலமாகும் என்பார்கள். உங்களுக்கு ஸ்தான பலத்தைப் போலவே பார்வை பலமும் சாதகமாகிறது. குருபகவான் உங்கள் ராசியையே பார்ப்பது மிகவும் நல்ல விஷயம். எப்போதும் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். இதுவரை நீங்கள் பார்த்த வேலைக்கான பலன் கைமேல் வரும். வருமானத்தில் கொஞ்சம் சேமிக்கவும் முடியும்.

குடும்பத்தில் தேவையற்ற அழுத்தங்க மனபாரங்கள் இருந்ததே அதெல்லாம் இனி நீங்கும். கலகலப்பாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையோடு அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். மனம்விட்டுப் பேசுவீர்கள். அதேபோன்று குருபகவான் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் வீட்டைப் பார்ப்பதால் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். இதுவரை வாங்கியிருந்த கடனைத் தந்துமுடிப்பீர்கள். செயல்களில் இருந்த தடங்கல்கள் விலகி பரிபூரண நன்மை ஏற்படும். வெற்றிகள் குவியும். புதிய வாகனம் வாங்குவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவதோடு குலதெய்வப் பிராத்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள்..

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

இந்தக் காலகட்டங்களில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். அவமானங்களும் சின்னச் சின்ன விபத்துகளும் ஏற்படலாம். எனவே செயல்களில் சிறு நிதானம் தேவை. புதிய வீடுமனை வாங்கும்போது ரொம்பவே எச்சரிக்கை அவசியம். சட்டப்படியே எதையும் செய்யுங்கள். சகோதர வகையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. யாரோடும் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள், தேவையற்ற பதற்றம், டென்ஷன் வந்து செல்லும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும். வீட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களிடம் கடுமை காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வாழ்க்கைத் துணையோடு விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். வீண் கவலைகள் மனதில் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களை வீட்டில் பேசிகொண்டிருக்காதீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் ஏற்படலாம். எதற்கெடுத்தாலும் உறவுகளோடு சண்டைக்கு நிற்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு:

குரு உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்து தேக்க நிலை மாறும். புதிய முதலீடுகளைச் செய்து போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள். பணியாளர்களால் உண்டான தொல்லை மறையும். அனுபவம் மிக்கவர்களைப் பணிக்குச் சேர்ப்பீர்கள். கடையை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். பொருள்கள் விற்றுத் தீரும். மின்னணுப் பொருள்கள், பயணம், ஹார்டுவேர்ஸ் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு தேடிவரும். சக ஊழியர்களிடையே இருந்த போட்டி பொறாமை மறையும். வெளிநாட்டுப் பணி தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பணி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிசுகிசுக்கள் மறையும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகப்படுத்துவதாக அமையும். வெற்றிவாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்

விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள் குறிப்பாக மாங்கல்யம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் செல்வ வளம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top